சிதம்பரத்தால் உருவான திமுக கூட்டணி; சோனியா - ராகுல் இடையே மனக்கசப்பு
சிதம்பரத்தால் உருவான திமுக கூட்டணி; சோனியா - ராகுல் இடையே மனக்கசப்பு
UPDATED : மார் 08, 2026 02:53 PM
ADDED : மார் 08, 2026 02:29 AM

நமது நிருபர்
ஒருவழியாக, தி.மு.க., காங்., கூட்டணி முடிவாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், முன்னாள் அமைச்சர் சிதம்பரம். அவர் முயற்சி எடுக்காவிட்டால், இன்று இந்த கூட்டணி தொடர்ந்திருக்காது.
நடிகர் விஜய் பக்கம், காங்., போய்விடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சிதம்பரம்.ஆனால், இது ராகுலுக்கு பிடிக்கவில்லை. அவருக்கும், சிதம்பரத்திற்கும் ஏற்கனவே ஆகாது. 'வெறும் 28 சீட் தானா... இரண்டு ராஜ்யசபா சீட் கொடுத்திருக்க வேண்டும்' என, சிதம்பரத்திடம் கூறினாராம் ராகுல்.
இதனால், சிதம்பரத்தின் மீதான வெறுப்பு ராகுலுக்கு, தி.மு.க., கூட்டணி விவகாரத்திற்குப் பின் அதிகமாகி விட்டது. இன்னொரு பக்கம், இந்த விவகாரம் சோனியா- - ராகுல் இடையே மனக்கசப்பையும் உருவாக்கி விட்டதாம்.
சோனியாவிடம் நேரடியாக பேசி, அவரை, 28 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு சம்மதிக்க வைத்து விட்டார் சிதம்பரம். இதை ராகுல் ஏற்கவில்லை என்றாலும், 'தி.மு.க.,வுடன் தான் நம் கூட்டணி தொடர வேண்டும்' என கறாராக சொன்னாராம் சோனியா. இவருக்கு தி.மு.க., மீது ஒரு பாசம்.
'டில்லியில் சோனியா வசிக்கும், 10 ஜன்பத் பங்களா எப்போதும் சிதம்பரத்திற்காக திறந்திருக்கும். ஆனால், சுனேரி பாக்கில் உள்ள ராகுல் பங்களாவின் கதவுகள், சிதம்பரத்திற்கு மூடப்பட்டு விட்டன' என்கின்றனர் காங்., மூத்த தலைவர்கள்.

