மக்களே உஷார்... புயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்!
மக்களே உஷார்... புயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்!
ADDED : நவ 30, 2024 06:13 AM

சென்னை: இன்று (நவ.,30) புயல் கரையை கடக்கும் போது சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: இன்று (நவ., 30) அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கும். பெஞ்சல் (FENGAL) புயல் இன்று (நவ.,30) பிற்பகல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

