ADDED : ஏப் 28, 2026 01:05 AM

ஏப்ரல் 28:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில், ராஜகோபாலன் - மீனாட்சி சுந்தரி தம்பதியின் மகனாக, 1923ல் இதே நாளில் பிறந்தவர் ஸ்ரீனிவாசன் எனும் செழியன்.
பட்டுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், கணிதத்தில் பி.எஸ்சி., ஹானர்ஸ் முடித்தார். அப்போது, திராவிடர் இயக்கத்தில் சேர்ந்து, அண்ணாதுரையுடன் இணைந்து பணியாற்றி, தி.மு.க.,விலும் தொடர்ந்தார்.
கடந்த 1962ல் பெரம்பலுார், 1967ல் கும்பகோணம் தொகுதிகளின் எம்.பி.,யானார். அண்ணாதுரை மறைவுக்கு பின், ஜனதா கட்சியில் சேர்ந்து, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றினார். 1978ல் ராஜ்யசபா எம்.பி.,யானார்.
பின், வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம், ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான லோக் தளம் கட்சிகளிலும் பணியாற்றிய இவர், 2001ல் அரசியலில் இருந்து விலகினார். தன் பார்லிமென்ட் உரைகளை, 'பார்லிமென்ட் பார் தி பீப்பிள்' என்ற நுாலாக வெளியிட்டவர், தன் 95வது வயதில், 2017, ஜூன் 6ல் மறைந்தார்.
மறைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பியான இவர் பிறந்த தினம் இன்று!
