ADDED : அக் 30, 2024 11:34 PM

அக்டோபர் 31, 1875
குஜராத் மாநிலம், கரம்சாத் எனும் ஊரில் ஜாவர்பாய் படேல் - லட்பா தம்பதியின் மகனாக, 1875ல் இதே நாளில் பிறந்தவர், சர்தார் வல்லபபாய் படேல்.
வழக்கறிஞரான இவர், ஆமதாபாத் மக்களின் பிரச்னைகளுக்காக, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்றார். காந்தியின் உரையை கேட்டு, சுதேசி இயக்கத்தில் சேர்ந்தார். குஜராத் மாநிலம், கேடா எனும் ஊர் பஞ்சத்தின்போது, வரிகொடா இயக்க போராட்டம், பார்டோலி விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வெற்றி பெற்றார்.
நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தபோது, தன் மனைவி இறப்பு செய்தி வந்தபோதும், தொடர்ந்து வாதாடி அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். காந்தியும், இவரும் மஹாராஷ்டிர மாநிலம், எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட போது நண்பர்களாயினர்.
சுதந்திரத்துக்கு பின் நாட்டின் உள்துறை அமைச்சராகி,565 சமஸ்தானங்களை இந்தியாவோடு ஒருங்கிணைத்தார். துணை பிரதமராகி, முப்படைகளையும், அரசியல் சாசனத்தையும் உருவாக்கிய இவர், 1950,டிசம்பர் 15ல் தன், 75வது வயதில் காலமானார்.
இந்தியாவின், 'இரும்பு மனிதர்' பிறந்த தினம் இன்று!
