விசைத்தறியாளர்களை காக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
விசைத்தறியாளர்களை காக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ADDED : ஏப் 17, 2025 06:50 PM
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
கோவை, திருப்பூரை சேர்ந்த, கூலிக்கு நெசவு செய்யும் லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு கேட்டு, 30 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஆலோசித்து, நெசவு கூலி இறுதி செய்யப்படும். ஆனால், 2022 ஒப்பந்த கூலியை முழுதுமாக வழங்காமல் குறைத்து வழங்குவதால், விசைத்தறியாளர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துடன், மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நியாயமான புதிய கூலி உயர்வு கேட்டு, பல முறை முறையிட்டும், சரியான தீர்வு கிட்டவில்லை. எனவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்காமல் உள்ளன. இதனால், அம்மாவட்டங்களின் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தி.மு.க., அரசு இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல், உடனே நியாயமான கூலி உயர்வை உறுதி செய்து, விசைத்தறியாளர்களை காக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

