ADDED : மார் 12, 2024 01:33 AM

பொன்முடியின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் கூறியதாவது:
குற்றவாளி என்ற தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதித்தால், எம்.எல்.ஏ., தகுதியிழப்பு நீங்கி விடும்.
ஒருவர் குற்றவாளி என்றால் தான், அதற்கான தண்டனை வரும்; குற்றவாளி என்பதற்கு தடை விதிக்கப்பட்டால், சட்டத்தின் பார்வையில் அவரை குற்றவாளியாக கருத முடியாது; தண்டனை என்பதும் வராது. அப்போது, ஏற்கனவே வகித்த எம்.எல்.ஏ., பதவி மீண்டும் வந்து விடும்.
குற்றவாளி என்பதற்கு தடை விதிக்காமல், தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால், எம்.எல்.ஏ., தகுதியிழப்பு நீங்காது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், சிறைக்கு செல்ல வேண்டாம்; மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும் வரை வெளியில் இருக்கலாம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, எம்.பி., பதவி பறிபோனது. குஜராத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை; உச்ச நீதிமன்றம் தான் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு எம்.பி., பதவி மீண்டும் வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்
.
- நமது நிருபர் -

