நெல்லையில் ஜாதி மோதல் அதிகரிப்பு சபாநாயகர் மீது மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
நெல்லையில் ஜாதி மோதல் அதிகரிப்பு சபாநாயகர் மீது மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 17, 2025 06:51 PM
சென்னை:''திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல் அதிகமாக நடக்கிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் சபாநாயகர் அப்பாவு,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கூறினார்.
அவரது பேட்டி:
திருநெல்வேலி மாவட்டத்தில், அதிகமான ஜாதிய வன்கொடுமைகளும், ஜாதி ஆணவக் கொலைகளும் நடக்கின்றன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் இடையே ஜாதி மோதல் அதிகமாக நடக்கிறது.
'திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல் இல்லை' என, சபாநாயகர் அப்பாவு சொல்லி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் சபாநாயகர்; அவர் சொல்வது ஏற்புடையதல்ல.
ஏற்கனவே நான்குநேரி மாணவர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் உயிர் பிழைத்த நிலையில், மீண்டும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்குள் ஜாதி மோதல் ஏற்பட்டு, மாணவர் ஒருவர் வெட்டப்பட்டு உள்ளார்.
மாணவர்கள் இடையே ஏற்படும் ஜாதி மோதல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை, அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாதி வெறியர்கள், ஜாதி ஆணவக்காரர்கள், ஜாதி மோதலை துாண்டுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

