லஞ்ச வழக்கில் மதுரை அமலாக்க அதிகாரி அங்கித்திவாரி ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச வழக்கில் மதுரை அமலாக்க அதிகாரி அங்கித்திவாரி ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 16, 2024 07:53 AM
மதுரை : திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018ல் வழக்கு பதிந்தனர். மதுரை அமலாக்கத்துறை இயக்குனரக தென் மண்டல துணை இயக்குனர் அலுவலக அதிகாரி அங்கித்திவாரி அலைபேசியில், ''சொத்து குவிப்பு தொடர்பாக உங்களுக்கு எதிராக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும்,'' என, சுரேஷ்பாபுவிடம் தெரிவித்தார்.
வழக்கை முடிக்க சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அங்கித்திவாரியை 2023 டிச.,1 ல் திண்டுக்கல் லஞ்ச போலீசார் கைது செய்தனர். ''போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அந்நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து ஜாமின் அனுமதிக்க வேண்டும்,'' என, உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இதை ஏற்கனவே விசாரித்த நீதிபதி விவேக்குமார் சிங்,''மனுவை விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்படுகிறது,'' என, உத்தரவிட்டார்.
நேற்று விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி: மனுதாரரை கைது செய்த 55 வது நாளில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தயாரித்து விட்டனர்.
மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் குற்றப்பத்திரிக்கையை கீழமை நீதிமன்றத்தில் போலீசாரால் தாக்கல் செய்ய முடியவில்லை.
இச்சூழலில் ஜாமின் வழங்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

