ஐ.எஸ்.ஐ.எஸ்., இந்திய தலைவர் உட்பட இருவர் அசாமில் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ்., இந்திய தலைவர் உட்பட இருவர் அசாமில் கைது
ADDED : மார் 21, 2024 04:57 AM

குவஹாத்தி : ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் அசாமில் நேற்று கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இருந்து அத்துமீறி அசாமுக்குள் நுழைந்த அவர்களை சிறப்பு அதிரடிப்படை போலீசார் பிடித்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இருவர் நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் வடகிழக்கு மாநிலமான அசாமின் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் நடத்திய அதிரடி தேடுதல்வேட்டையில் வங்கதேசத்தில் இருந்து அத்துமீறி புகுந்து அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் பதுங்கியிருந்த ஹரிஸ் பரூக்கி, அவரது கூட்டாளி ரேஹன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதில் பரூக்கி ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் என தெரியவந்துள்ளது.
இவர்கள் நம்நாட்டில் பயங்கரவாத இயக்கம் வளர உதவியதும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதும், பல்வேறு சதி செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக அதிரடிப்படை போலீசார் தெரிவித்தனர்.
இவர்கள் மீது டில்லி மற்றும் லக்னோவில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் தொடர்ந்த பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிடிபட்ட இருவரையும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்போம் என சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

