கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம் ரூ.2 கோடி வசூலித்த உளவுத்துறை ஏட்டு, எஸ்.ஐ., குறித்து விசாரணை
கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம் ரூ.2 கோடி வசூலித்த உளவுத்துறை ஏட்டு, எஸ்.ஐ., குறித்து விசாரணை
UPDATED : ஏப் 17, 2024 07:48 AM
ADDED : ஏப் 16, 2024 08:43 PM

சென்னை:ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம், 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்த உளவுத்துறை தலைமை காவலர் மற்றும் எஸ்.ஐ., குறித்து விசாரணை நடக்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும், ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழா, மார்ச் 22ம் தேதி துவங்கி, நாடு முழுதும் நடந்து வருகிறது.
அதற்கு ஏற்ப, வீரர்கள் மீதும், கிரிக்கெட் அணிகள் மீதும் பணம், பரிசு பொருட்களை பந்தயமாக கட்டி சூதாட்டமும் அரங்கேறி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில், 'ஆன்லைன்' கிரிக்கெட் சூதாட்டத்தில், 1.50 கோடி ரூபாயை கடன் வாங்கி இழந்த அரசு அதிகாரி தர்ஷன் பாலு என்பவரின் மனைவி தற்கொலை செய்து இறந்தார். தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும், கிரிக்கெட் சூதாட்ட கும்பல் சிக்கிஉள்ளது.
வடசென்னை பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் சூதாட்ட கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல் குறித்து உளவுத்துறை தலைமை காவலர் ஒருவருக்கு தெரியவந்துள்ளது.
அவரும், இதே துறையில் பணிபுரியும் எஸ்.ஐ., ஒருவரும், கிரிக்கெட் சூதாட்ட கும்பலுடன் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து, சிறுக சிறுக, 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
சர்ச்சையில் சிக்கியுள்ள தலைமை காவலர் மற்றும் எஸ்.ஐ., ஆகியோர் ஒரே இடத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஏற்கனவே, ஹவாலா பண பரிமாற்ற கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, தலைமை காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, அவரும், எஸ்.ஐ.,யும் கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம், கோடிக்கணக்கில் வசூலித்த புகாரில் சிக்கியுள்ளனர்.
இருவரும் கிரிக்கெட் சூதாட்ட கும்பலுடன் எத்தனை முறை தொடர்பு கொண்டனர் என்ற விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரகசிய விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

