அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் புரட்சி வெடிக்கும்; காடேஸ்வரா சுப்ரமணியம்
அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் புரட்சி வெடிக்கும்; காடேஸ்வரா சுப்ரமணியம்
ADDED : டிச 27, 2025 01:39 AM

மதுரை: 'திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணில் தீபம் ஏற்ற மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது புரட்சியாக வெடிக்கும்' என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி, மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ணசந்திரன் வீட்டிற்கு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்நேற்று மாலை சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூர்ண சந்திரன் தன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் தி.மு.க., மீது பற்றுள்ளவர்கள். தி.மு.க., அரசு அவர்களது குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும். இதுவரை தி.மு.க., வைச் சார்ந்த யாரும் நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை.
கந்துாரி விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியது ஏற்புடையதல்ல. இரண்டுமதத்தினருக்கும், மலை மீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.
இல்லையென்றால் இருவருக்கும் அனுமதி மறுக்க வேண்டும்.அதனைவிட்டு விட்டு, ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்குவது சரியானதல்ல.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர்.
அதற்காக அவர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், புரட்சியாக வெடிக்கும். எனவே, அரசு எச்சரிக்கையாக இருந்து அறநிலையத்துறையை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

