கோவை சிறையில் வ.உ.சி., இழுத்த செக்கு மாற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
கோவை சிறையில் வ.உ.சி., இழுத்த செக்கு மாற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 21, 2024 01:14 AM
மதுரை:வ.உ.சி., நினைவாக கோவை சிறையிலுள்ள செக்கை ஒட்டப்பிடாரம் நினைவு இல்லத்திற்கு மாற்ற கோரிய மனுவை, தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் குமரன் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனு:
வ.உ.சிதம்பரனார் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பேசியதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு எண்ணெய் ஆட்டுவதற்கு செக்கில் காளைகளை பூட்டுவதற்கு பதிலாக, அவரை பூட்டி செக்கை இழுக்க வைத்து கொடுமைப்படுத்தினர்.
கோவை மத்திய சிறையில் அந்த செக்கு உள்ளது. அந்த செக்கை, துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சி., நினைவு இல்லத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு அதை விசாரித்தது. அரசு தரப்பில், 'செக்கை ஒட்டப்பிடாரத்திற்கு மாற்ற வாய்ப்பில்லை' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இது, நிர்வாக ரீதியான விவகாரம். இதில் மனுதாரர் கோரும் நிவாரணத்திற்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மனுவை தமிழக தலைமைச் செயலர், துாத்துக்குடி கலெக்டர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

