ADDED : டிச 12, 2024 09:13 AM

சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக, 20 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று (டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள் ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலைய பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சிறிதுநேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வரும் விமானங்கள் தரையிறங்க சுமார் 20 நிமிடங்கள் வரையில் தாமதமாகிறது. வெளிநகரங்களுக்கு புறப்படும் 15 உள்நாட்டு விமானங்களின் சேவையும் தாமதமாகியுள்ளது.
அதேபோல, மும்பைக்கு செல்ல வேண்டிய கொச்சி விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னைக்கே மீண்டும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

