சட்டசபையில் நடந்தது என்ன?: கவர்னர் மாளிகை விளக்கம்
சட்டசபையில் நடந்தது என்ன?: கவர்னர் மாளிகை விளக்கம்
UPDATED : பிப் 12, 2024 05:49 PM
ADDED : பிப் 12, 2024 02:16 PM

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,12) கவர்னர் ஆர்.என்.ரவி 3 நிமிடத்தில் தனது உரையை முடித்தார். இதற்கான காரணம் மற்றும் நடந்த நிகழ்வுகள் குறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
தமிழக சட்டசபை இன்று (பிப்.,12) கவர்னர் உரையுடன் துவங்கியது. அப்போது உரையின் துவக்கம் மற்றும் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என முன்பே கூறியும் அதனை அரசு புறக்கணித்ததாகவும், உரையில் உண்மைக்கு மாறான அம்சங்கள் இடம்பெற்றதாகவும் கூறி 2 நிமிடத்தில் தனது உரையை முடித்தார் கவர்னர் ஆர்.என்.ரவி. இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டு கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்.,9ம் தேதி கவர்னரின் உரை ஆவணம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. அதில் உண்மைக்கு மாறாக தவறான அம்சங்கள் அடங்கிய பல பல பத்திகள் இருந்தன. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையைக் காட்டவும், கவர்னர் உரையின் துவக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக முதல்வருக்கும், சபாநாயகருக்கும் கவர்னர் கடிதம் எழுதியிருந்தார்.
கவர்னரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். கவர்னரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது.
உண்மைக்கு மாறான தகவல்கள்
இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதல்வர், எம்எல்ஏ.,க்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738வது குறள் அடங்கிய முதல் பத்தியையும் படித்தார். அதன்பிறகு, அதில் இடம்பெற்ற தவறான கூற்றுகள், உண்மைக்கு மாறான பத்திகள் இடம்பெற்றிருந்ததால்அரசியலமைப்புச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு தனது உரையை படிக்க இயலாது என்பதை கவர்னர் வெளிப்படுத்தினார்.
சபாநாயகர் அவதூறு
அதன்பின் சபாநாயகர், உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். அந்த உரை முடியும் வரை கவர்னர் அமர்ந்திருந்தார்; சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டிருந்த அட்டவணையை பின்பற்றாமல், கவர்னருக்கு எதிராக அவதூறை பேச துவங்கினார். நாதுராம் கோட்சே மற்றும் பலவற்றை பின்பற்றுபவர் என்றும் பேசினார்.
சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கவுரவத்தையும், அவரது நாற்காலியின் கவுரவத்தையும் குறைத்தார். கவர்னருக்கு எதிராக வசை பாடிய போது, கவர்னர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார். இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வீடியோ வெளியீடு
சட்டசபையில் இன்று கவர்னர் ரவி ஆற்றிய உரை அடங்கிய வீடியோ கவர்னர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 3:17 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவை தமிழ் சப் டைட்டிலுடன் வெளியிட்டுள்ளனர்.

