மூன்றாம் பாலினத்தவர் இடஒதுக்கீடு கொள்கை வகுக்கிறது தமிழக அரசு
மூன்றாம் பாலினத்தவர் இடஒதுக்கீடு கொள்கை வகுக்கிறது தமிழக அரசு
ADDED : அக் 11, 2024 09:54 PM
சென்னை:'கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கொள்கை வகுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து, இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த விளக்கக் குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை எனக்கூறி, நிவேதா என்ற மூன்றாம் பாலினத்தவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மனுதாரரின் விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்; மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது' என்று, உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தன்னை சிறப்பு பிரிவினராகக் கருதவில்லை.
இது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது எனக்கூறி, கால்நடை மருத்துவ படிப்பில், தனக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் நிவேதா மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கொள்கை வகுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து, இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்கப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த முதல் அமர்வு, வரும் 25ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்ததோடு, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்குகளுடன் சேர்த்து, இந்த வழக்கையும் பட்டியலிடும்படி உத்தரவிட்டது.

