தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு காலக்கெடு நிர்ணயம்
தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு காலக்கெடு நிர்ணயம்
ADDED : அக் 17, 2024 02:50 AM
சென்னை,:தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் வகையில், வணிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி, அதிக உயரம் இல்லாத கட்டடங்களில் கட்டுமான திட்டத்தை மாற்றுதல், கூடுதலாக சேர்த்தல், திருத்தம் செய்தல், மறுமதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான அனுமதியை, டி.டி.சி.பி., எனப்படும் நகர ஊரமைப்பு துறை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
அதிக உயரம் உள்ள கட்டடத்திற்கு, அதன் தலைமை அலுவலக அளவில், 90 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், 10,764 சதுர அடிக்கு குறைவான கட்டடங்களுக்கு, 45 நாட்களுக்குள் அனுமதி தர வேண்டும். அந்த அளவு அல்லது அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு, 55 நாட்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி, 30 நாட்களுக்குள்; நகராட்சி நிர்வாக ஆணையரகம், 45 நாட்கள்; பேரூராட்சி இயக்குனரகம், 45 நாட்கள்; ஊரக வளர்ச்சி இயக்குனரகம், 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
கட்டடத்தை இடித்து புனரமைப்பதற்கான அனுமதியை, சென்னை மாநகராட்சி, 30 நாட்கள்; நகராட்சி நிர்வாக ஆணையரகம், 45 நாட்கள்; பேரூராட்சி இயக்குனரகம், 45 நாட்கள்; ஊரக வளர்ச்சி இயக்குனரகம், 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
அரசு ஆதாரங்களில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதியை, 75 நாட்களுக்குள், நீர்வளத் துறை வழங்க வேண்டும்.

