ADDED : ஏப் 24, 2026 11:20 PM
சென்னை:ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த, 23ம் தேதி ஒட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு, 75,064 இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்ட்கள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டன.
பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவை 62 இடங்களில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும், பாதுகாப்பான அறையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பூட்டு போடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களுக்கு துணை ராணுவ படையினருடன் இணைந்து, போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 24 மணி நேரமும், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே மாதம் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது.
