கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
UPDATED : மார் 07, 2026 04:50 PM
ADDED : மார் 07, 2026 02:24 PM

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நான்கு மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு இன்று (மார்ச் 07) தீர்ப்பு அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையை அறிவித்தார்.
கோவை, பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ., 2ம் தேதி இரவில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ்,30, இவரது சகோதரர் கார்த்திக்,21, மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் மீது, டிச., 3 ல், முதல் கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை கூடுதல் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு, டிச., 19 ல் கோவை மகளிர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. ஜன., 9ல், 220 பக்கம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜன., 29 ல் குற்றச்சாட்டுபதிவு செய்யப்பட்டு, பிப்., 2ல் சாட்சி விசாரணை துவங்கியது.
பிப்., 23 ல் சாட்சி விசாரணை நிறைவு பெற்றது. பிப்., 24 ல் அரசு தரப்பு வக்கீல் ஜிஷா, இறுதி வாதத்தை முன்வைத்தார். எதிர் தரப்பில் இலவச சட்ட உதவி மைய வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார். அதன்படி மதியம் 3 மணி அளவில் தண்டனை விபரங்களை அவர் வெளியிட்டார். குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார்.
கோவை மாணவி பாலியல் வழக்கின் தீர்ப்பு குறித்து அரசு வக்கீல் ஜிஷா பேட்டி:
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் என்ற தண்டனையை நீதிபதி விதித்துள்ளார். விசாரணை அதிகாரிகளின் விசாரணையை நீதிபதி பாராட்டினார்.
மொத்தத்தில் 72 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 7 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த தினத்தில் குற்றவாளிகள் மாணவியுடன் வந்த நபரை தான் முதலில் தாக்கி உள்ளனர். பின்னர் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
டிஎன்ஏ பரிசோதனை, மாணவியின் நண்பரை வெட்டிய இடத்தில் கிடைத்த தடயங்கள், கைரேகை விவரங்கள் என அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம். பாதிக்கப்பட்ட பெண், ஆண் நண்பரை பற்றியும் பலவிதமாக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. அனைத்தும் தவறானவை. அவர்கள் இருவரும் காதலர்கள். இருவரின் செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம்.
குற்றவாளிகள் 3 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. போலீசார் இனி இதுபற்றி விசாரணையை நடத்துவார்கள்.
இவ்வாறு வக்கீல் ஜிஷா கூறினார்.

