ADDED : ஆக 29, 2025 06:42 AM

சென்னை: 'தமிழகத்தில் சில இடங்களில், இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், 6 செ.மீ., மழை பெய்தது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சோலையாரில், 5; உபாசி மற்றும் வால்பாறையில் தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, தெற்கு ஒடிஷா அருகே வலுவிழந்தது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், செப்., 3 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இன்று வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை, அதிகமாக பதிவாகக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில், இன்றும் , நாளையும், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் , இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.