முதுகில் குத்தி இதயத்தை துளைத்த கத்தி; 16 மணிநேரம் போராடிய ஆந்திர தொழிலாளி
முதுகில் குத்தி இதயத்தை துளைத்த கத்தி; 16 மணிநேரம் போராடிய ஆந்திர தொழிலாளி
UPDATED : நவ 17, 2024 01:26 AM
ADDED : நவ 17, 2024 12:33 AM

சென்னை, முதுகில் கத்தி குத்தப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர மாநில கூலி தொழிலாளிக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம், மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் வீராசாமி, 44. கட்டுமான கூலி தொழிலாளியான அவருக்கும், அவரது சகோதரர் மகனுக்கும், 14ம் தேதி நடந்த மோதலில், அவரது முதுகில் கத்தி குத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றபோது, முறையான சிகிச்சை அவருக்கு கிடைக்கவில்லை. 16 மணி நேர அவதிக்கு பின், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, மருத்துவ மனை டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து, 15 செ.மீ.,அளவிற்கு உடலினுள் பாய்ந்திருந்த கத்தியை அகற்றினர்.
இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:
வீராசாமிக்கு குத்தப்பட்டிருந்த கத்தி, இடது புற நுரையீரலிலும், இதயத்தில் இருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் 'அயோடா' தமனியிலும் கிழிசலை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டியுள்ளனர்.
வழக்கமான அறுவை சிகிச்சையில், உடலில் பாய்ந்துள்ள கத்தியை அகற்ற, மயக்க மருந்து செலுத்தி நோயாளியை படுக்க வைப்பது அவசியம்.
அவ்வாறு செய்தால், கத்தி மேலும் உள்ளே சென்றுவிடும் என்பதால், சாய்ந்த நிலையில் அவரை அமரவைத்து, மயக்க மருந்தியல் நிபுணர்கள் சண்முகபிரியா, ரவி ஆகியோர் ஒரு பக்க நுரையீரலின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தும் வகையில், சாதுர்யமாக மயக்க மருந்து செலுத்தினர்.
பின், இதய நெஞ்சக அறுவை சிகிச்சை துறை இயக்குனர் மாரியப்பன் வழிகாட்டுதல்படி, டாக்டர்கள் சிவன்ராஜ், ஜெயபிரகாஷ் ஆகியோர் அடங்கியகுழுவினர் கத்தியை அகற்றி, கிழிசல் இருந்த பகுதியை சீராக்கினர்.மூன்று மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் பயனாக, அந்தநபர் நலமுடன் உள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அவரை கண்காணித்து வருகிறோம். காப்பீட்டு கட்டுப்பாடுகள், காவல் துறை நடைமுறைகளை பொருட்படுத்தாமல் வெளி மாநிலத்திலிருந்து வந்த ஒருவருக்கு உடனடியாக சிகிச்சையளித்து உயிரை காப்பாற்றியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

