அதிமுக கொள்கை எதிரி அல்ல; பழனிசாமி மீது காழ்ப்பு இல்லை; திருமாவுக்கு வந்தது திடீர் பாசம்!
அதிமுக கொள்கை எதிரி அல்ல; பழனிசாமி மீது காழ்ப்பு இல்லை; திருமாவுக்கு வந்தது திடீர் பாசம்!
ADDED : ஜூலை 24, 2025 09:10 PM

சென்னை: 'அதிமுக எங்களுக்கு கொள்கை எதிரி அல்ல. அதிமுக மீதோ, பழனிசாமி மீதோ எங்களுக்கு எந்த காழ்ப்பும் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விடுதலை சிறுத்தை கட்சி குறித்து பல விமர்சனங்களை வைக்கிறார். அதை வரவேற்கிறோம். ஆனால் பாஜவின் வழிகாட்டுதலின்படி, அவர் இது போன்ற விமர்சனங்களை வைக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் விடுதலை சிறுத்தை கட்சி பாஜவை தான் கொள்கை பகையாக முன்னிறுத்துகிறது தவிர, அதிமுகவை அவ்வாறு முன்னிறுத்தவில்லை.
முதுகில் சவாரி
பாஜவால் பாதிக்கப்பட்ட கூட்டணி கட்சிகள் பல. மஹா., வில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்ததற்கு பாஜ தான் காரணம். இப்படி பல உதாரணங்களை, சான்றுகளை காட்ட முடியும். கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி அவர்கள் முதுகில் சவாரி செய்து, அந்தந்த மாநிலங்களில் காலூன்றி வருகிறது பாஜ.
பலவீனப்படுத்த முயற்சி
அதை உத்தியை தமிழகத்திலும் பாஜ கையாள்கிறது. கடைபிடித்து வருகிறது. அதிமுகவை பயன்படுத்தி இங்கே வளர துடிக்கிறார்கள். அதிமுகவை பலவீனப்படுத்த துடிக்கிறார்கள். அவர்கள் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட, அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்து விட வேண்டும் என்ற பதைப்பு தான் பாஜவுக்கு மேலோங்கி இருக்கிறது.
தோழமை உணர்வு
இதை தான் விடுதலை சிறுத்தை கட்சி சுட்டிக் காட்டுகிறோம். அதிமுக மீது ஒரு தோழமை உணர்வு இருக்கிறது. அது பாழ்பட்டு விடக்கூடாது, சிதைந்து விடக் கூடாது என்கிற பொறுப்புணர்வோடு தான் இதை சுட்டிக் காட்டுகிறோம் தவிர, அதிமுக மீதோ, பழனிசாமி மீதோ எங்களுக்கு எந்த காழ்ப்பும் இல்லை. நாங்கள் திமுக கூட்டணியில் இருப்பதால் தான் பாஜவையும், அதிமுகவையும் விமர்சிக்கிறோம் என்று பலர் கருதுகிறார்கள்.
விமர்சிப்போம்
திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜவின் கொள்கையை விடுதலை சிறுத்தை கட்சி ஒருபோதும் ஏற்காது. ஏற்கனவேயும் விமர்சித்து இருக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம்.
பாஜ- அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. அதிமுக ஒரு திராவிட இயக்கம்.ஈவெரா கொள்கையை பேசுகின்ற இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களை முன்னிறுத்தி இயங்குகிற இயக்கம் என்பதால் சில கருத்துக்களை நட்புணர்வோடு தான் முன் வைக்கிறோம். அது தேவையற்றது என்றால் நாங்கள் பேசப் போவதில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.