ADDED : ஆக 15, 2025 01:25 PM

சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி இன்று பாஜவில் இணைந்தார்.
'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர், பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்காக தனது குரலை பதிவு செய்து வந்தார். இதற்காக வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன், சென்னையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சுக்காக தமிழக போலீசார் அவரை, ஐதராபாத் சென்று கைது செய்தனர்.
பாஜவில் ஐக்கியம்
இந்நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி இன்று பாஜவில் இணைந்தார்.
அவருடன் பிக் பாஸ் பிரபலமும், சமூக செயற்பாட்டாளருமான நமீதா மாரிமுத்துவும் பாஜவில் இணைந்தார். இருவரையும் பாஜவுக்கு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.