'சிக்கன் ரோடு' என்ற பெயரில் அரங்கேறும் புது மோசடி
'சிக்கன் ரோடு' என்ற பெயரில் அரங்கேறும் புது மோசடி
ADDED : பிப் 24, 2026 03:04 AM

சென்னை: 'குறைவான இந்திய பணத்தை முதலீடு செய்து, வெளிநாட்டு பணத்தை அதிகம் சம்பாதிக்கலாம்' என கூறி, 'சிக்கன் ரோடு' என்ற பெயரில் மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது.
ஆன்லைன் வேலை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' என, பல வகைகளில், தினமும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள், இவற்றை தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், மோசடி கும்பல், புதுப்புது வழிகளில் மோசடி செய்து, பணத்தை பறித்து வருகிறது.
அந்த வகையில், சமீப நாட்களாக, இந்திய பணத்தை முதலீடு செய்து விளையாடினால், 'யூரோ கரன்சியில் நிறைய சம்பாதிக்கலாம்' என கூறி, மோசடி கும்பல் புது மோசடியை அரங்கேற்றி வருகிறது.
இது குறித்து, சைபர் வல்லுநர்கள் சிலர் கூறியதாவது:
'பேஸ்புக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' ஆகிய சமூக வலைதளங்களில், 'சிக்கன் ரோடு' என்ற பெயரில், செயலி ஒன்று பிரபலப்படுத்தப்படுகிறது. அதில், இந்தியர்கள், குறைந்த தொகையை செலுத்தி விளையாடினால், யூரோ கரன்சியில் நல்ல லாபம் கிடைக்கும் என விளம்பரப்படுத்துகின்றனர். இந்த செயலி, 'ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில்' தடை செய்யப்பட்டுள்ளது.
விபரம் தெரியாதவர்கள், குறைந்த பட்சம் 3,000 ரூபாயில் துவங்கி, லட்சங்களில் பணத்தை இழந்து வருகின்றனர். இது மட்டுமின்றி அங்கீகரிக்கப்படாத செயலியை பதிவிறக்கம் செய்வது, நம் வங்கி உள்ளிட்ட, தனிப்பட்ட தகவல்கள்கள் திருடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

