ஒப்பந்த பணம் விடுவிக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம்; கலெக்டர் அலுவலக பணியாளர்கள் 3 பேர் கைது
ஒப்பந்த பணம் விடுவிக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம்; கலெக்டர் அலுவலக பணியாளர்கள் 3 பேர் கைது
ADDED : நவ 05, 2025 07:39 AM

ராமநாதபுரம்: ரோடு அமைத்ததற்கான ஒப்பந்த பணத்தை விடுவிக்க ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சித்துறை இரண்டு வரைபட அலுவலர்கள், உதவியாளர் ஒருவர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்ததாரர் ஒருவர் பரமக்குடி பகுதியில் ரோடு அமைக்க டெண்டர் எடுத்துள்ளார். அந்த பணி முடிந்த நிலையில் ஒப்பந்த தொகையை வழங்குமாறு கலெக்டர் அலுவலக 2வது தளத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சி முகமை பொறியியல் பிரிவில் உள்ள மூத்த வரைபட அலுவலர் வீரசேகரனை அணுகினார்.
ஒப்பந்த தொகையில் ஒரு சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும். அதனை இளநிலை வரைபட அலுவலர் நாகலிங்கத்திடம் கொடுக்குமாறும் கண்டிப்புடன் வீரசேகரன் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் நோட்டுகளை ஒப்பந்ததாரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை நேற்று ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவில் சென்று அவர் நாகலிங்கத்திடம் கொடுத்தார்.
அவர் பணத்தை உதவியாளர் அருணிடம் கொடுக்க, அருண் வீரசேகரனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மூவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கணினிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.

