'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்று துவக்கம் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்று துவக்கம் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை
ADDED : மார் 22, 2024 11:21 PM
சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி ஆலோசனை தரும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று துவங்க உள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஆலோசனை தர உள்ளனர். கோவை ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் அறங்காவலர் மலர்விழி, இந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.
பிளஸ் 2 தேர்வு முடித்துள்ள மாணவர்கள், அடுத்து உயர்கல்வியில் சேர்வதற்கான ஆலோசனை தர, தினமலர் நாளிதழ் மற்றும் கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகின்றன.
இந்த நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், இன்று துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை 6:30 மணி வரை, உயர்கல்வி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடக்க உள்ளது.
பரிசுகள்
இதில் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம். www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505 74442 என்ற மொபைல்போன் எண்ணின் வாட்ஸாப்பிலும், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.
இந்த கருத்தரங்கில், 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
கருத்தரங்கில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு, சிறந்த பதில் அளிப்பவர்களுக்கு, லேப்டாப், டேப் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும்.
ஐ.ஐ.டி., கார் கண்காட்சி
வழிகாட்டி நிகழ்ச்சியில், 80க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறும்.
அவற்றில், கல்வி நிறுவன பிரதிநிதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களை வழங்குவர்.
ஐ.ஐ.டி., நிறுவனங்கள் உருவாக்கிய, முதல் சூரியசக்தி கார், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. குகா என்ற ஜெர்மன் நிறுவனத்தின் ரோபோ, ட்ரோன், செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ., சார்ந்த, சிறப்பு கண்காட்சியும் இடம் பெற உள்ளது.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ஆகியன, இந்த நிகழ்ச்சியின் பவர்டுபை நிறுவனங்களாக செயல்படும்.
ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிரின்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் ஷிவ் நாடார் பல்கலை ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

