பழநி கிரி வீதி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் தவறினால் கலெக்டர் ஆஜராக வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பழநி கிரி வீதி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் தவறினால் கலெக்டர் ஆஜராக வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 28, 2024 07:23 AM
மதுரை: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 2 க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு திண்டுக்கல் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் கலெக்டர் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற 2018 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தும், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் அவ்வப்போது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பிக்கிறது.நேற்று நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.கோயில் தரப்பு: ஆக்கிரமித்து 139 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
அவர்களுக்கு மாற்று இடம் தருவதாக கோயில் நிர்வாகம் உறுதியளித்தும் வெளியேற மறுக்கின்றனர். மலையிலுள்ள கோயிலில் அன்னதானம் நடைபெறுகிறது. அங்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்கள் உள்ளன.
கிரி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் அங்கு மடம் அமைத்து அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜூலை 2க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு திண்டுக்கல் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறினால் ஜூலை 2 ல் கலெக்டர், சம்பந்தப்பட்ட தாசில்தார் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

