முல்லைப் பெரியாறு அணையில் மழைநீர் வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழைநீர் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 29, 2024 10:29 PM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் மழை துவங்கியதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து 2 வாரத்துக்கும் மேலாக பெய்து வந்த மழை கடந்த இரண்டு நாட்களாக குறைந்தது. இந்நிலையில் மீண்டும் நீர்ப்பிடிப்பில் மழை பெய்யத் துவங்கியுள்ளது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 38.6 மி.மீ., தேக்கடியில் 11.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 1208 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1457 கன அடியாக அதிகரித்தது.
நீர்மட்டம் 128.15 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1333 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4298 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் அவ்வப்போது சாரல் மழை தொடர்ந்ததால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 119 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

