மகளிருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி
மகளிருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி
ADDED : ஜூன் 29, 2024 12:25 AM
சென்னை:''மாநிலம் முழுதும் உள்ள இளம் மகளிருக்கு, மத்திய அரசு உத்தரவுப்படி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.
சட்டசபையில் அவரது பதிலுரை:
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 120 சதவீதம் கூடியுள்ளது. புற்றுநோய் என்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
ஈரோடு, திருப்பத்துார், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அங்குள்ள 2.50 லட்சம் பேரை பரிசோதித்ததில், 76 பேருக்கு தொடக்க நிலை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் நல்வாழ்வு துறைக்கு 79 விருதுகள் கிடைத்தன. ஆனால், மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில், 545 விருதுகள் கிடைத்துள்ளன.
ஆனால், எல்லாவற்றிற்கும் குஜராத் மாநிலத்தை உதாரணம் கூறுகிறோம். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 60 மருத்துவ வல்லுனர்கள் தமிழகம் வந்து, இங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகள் குஜராத்திற்கு வருவதற்கு, 20 ஆண்டுகள் ஆகும் என கூறிச் சென்றனர்.
மகளிர் இளம் பருவத்தினருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால், நாடு முழுதும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்திற்கு தடுப்பூசிகளை தருவதாக சொல்லியுள்ளனர். எனவே, விரைவில் மாநிலம் முழுதும் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.

