ADDED : ஏப் 20, 2024 10:26 PM
சென்னை:'பணியாளர் தேர்வுக் கட்டணத்தை திரும்ப பெற, மே 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக மின்வாரியம், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர், 2,900 கள உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020ம் ஆண்டு ஜனவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
தேர்வு கட்டணமாக பொதுப் பிரிவினரிடம் 1,000 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளிடம் 500 ரூபாயும் வசூலிக்கப்பட்டன. அதே ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆண்டு இறுதி வரை ஊரடங்கு நீடித்தது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதனால், மின்வாரிய தேர்வு நடத்தவில்லை.
தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்கள் தேர்வு, அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், 2020ல் வெளியிடப்பட்ட ஆட்கள் தேர்வு அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக, 2022 ஜூலையில் மின்வாரியம் அறிவித்தது.
தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையை, விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு, மின்வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இன்னும் பலர் தங்களின் விபரங்களை பதிவேற்றாமல் உள்ளனர்.
எனவே, தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெற விரும்புவோர், மே 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

