ADDED : ஏப் 06, 2024 12:25 AM
சென்னை:புதிய கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு, ஒருங்கிணைப்பு பயிற்சி அளிக்க வேண்டியது கட்டாயம் என, கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பில் சேரும் போது, அவர்களது கற்றல் முறையில் மாற்றம் ஏற்படுகிறது.
உயர் கல்வி கற்றல் முறை குறித்து, பள்ளி முடிக்கும் மாணவர்களுக்கு உரிய விபரங்கள் தெரியாததால், முதலாம் செமஸ்டர் தேர்வுகளில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இந்நிலையை மாற்ற, முதலாம் ஆண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கு, உயர் கல்விக்கான ஒருங்கிணைப்பு பயிற்சியை, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் வழங்க வேண்டியது கட்டாயம் என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
அதாவது, கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, கற்றல் முறை, வளாக செயல்பாடுகள், ஆசிரியர்களுடனான அணுகுமுறை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

