ADDED : ஏப் 02, 2024 01:10 AM

''மத்தியில் ஆட்சி அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! இதை எல்லாம் கேட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விதி. என்ன கொடுமை, பாருங்கள்..,” என்கிறார் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
சுவாமி மேலும் கூறியதாவது:
கச்சத்தீவு ஒப்பந்தம், 1974ல் கையெழுத்தானது. அப்போதே சர்ச்சை எழுந்தது. பிரதமராக இருந்த இந்திராவும், முதல்வராக இருந்த கருணாநிதியும் சேர்ந்து, நாட்டுக்கு எதிரான காரியத்தில் ஈடுபட்டனர் என்பது ஊர், உலகம் முழுக்க தெரியும்.
ஆனால் இதை 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் பேசி முடித்து விட்டோம். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை, பலரும் எழுப்புவது போல ஒரு காலத்தில் நானும் எழுப்பி இருக்கிறேன். ஆனால், நிதர்சனம் இதுதான் என்று புரிந்தபின், தீவை விட்டுவிட்டு நம்முடைய மீனவர்களுக்கான பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.
கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, கப்பல் எடுத்துக் கொண்டு போய் கச்சத்தீவில் இறங்கி பிரச்னை செய்திருக்கிறேன். அரசுகள் என்னை கைது செய்தன. ஆனாலும், இந்த விஷயத்தில் அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டதால், இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சு நடத்தியது.
அதன் விளைவாக, இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் இலங்கை அரசால் பிரச்னை ஏற்படுவது நின்றுபோனது. அதிலிருந்தே அந்த பகுதியில் நமது மீனவர்களுக்கு இலங்கை அரசால் பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை.
சிறு சம்பவங்கள் நடந்தால், உடனே இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறதே, கைது செய்கிறதே, படகுகளை பறிமுதல் செய்கிறதே என்று கூக்குரல் எழுப்புகின்ரனர். இதெல்லாம் நியாயம் எது என்று உணராமல் எழும் எதிர்ப்புகள்.
இலங்கை அரசு, இந்திய மீனவர்களை அனாவசியமாக தொந்தரவு செய்வது கிடையாது. அவர்களுடைய கடல் எல்லைக்குள் புகுந்து, அவர்களின் கடல் வளங்களை மற்றவர்கள் கொள்ளையடிக்கும் போது தான், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.
பெரும்பாலான மக்களுக்கு இது புரிவது இல்லை. உண்மையை உணராமல் பிரச்னையை பெரிதாக்கி பேசுகின்றனர்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை நானும் ஏற்கவில்லை. ஆனால், அதை மீட்க யார் நியாயமான நடவடிக்கை எடுத்தனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.
அடித்துச் சொல்கிறேன். என்னைத் தவிர யாரும் இந்த விஷயத்தை நிஜமான அக்கறையோடு அணுகவில்லை. அரசியல் லாபத்துக்காக இந்த விஷயத்தை இப்போது கிளப்புகின்றனர்.
நானூறு இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஜம்பம் பேசுபவர்கள், மக்கள் மனநிலை குறித்த உளவுத்துறை அறிக்கையை பார்த்து உடல் நடுங்குகின்றனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடுகின்றனர்.
அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள வெற்று தலைவர்கள் சொன்ன யோசனைதான் கச்சத்தீவு விவகாரத்தை புதிதாக கிளப்பலாம் என்பது.
சரி, அவர்கள் கண்டுபிடிப்பை பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்வோம். நாடே அறிந்த கச்சத்தீவு விவகாரத்தில,் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இப்போது வெளியே சொல்வதால், அந்த விவகாரத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட போகிறது?
பிரச்னைக்கு தீர்வு எதையாவது சொலகிறாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. இவர்கள் சொல்லும் மோசடி கதைகளை கேட்டு, தமிழக மீனவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவர் என்று நம்பினால், அதைவிட பெரிய அபத்தம் கிடையாது.
- நமது நிருபர் -

