14,000 பழைய குற்றவாளிகள் 'செயலி' வாயிலாக கண்காணிப்பு
14,000 பழைய குற்றவாளிகள் 'செயலி' வாயிலாக கண்காணிப்பு
ADDED : ஜூன் 15, 2024 09:22 PM
சென்னை:தமிழக காவல் துறையில் பருந்து, பந்தம் மற்றும் நிவாரணம் என, மூன்று செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
நிவாரணம் செயலி வாயிலாக, காவல் நிலையங்கள் 'ஆன்லைன்' மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகங்களில் மக்கள் தரும் புகார்களையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, பந்தம் செயலி வாயிலாக, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும் முதியோர், வாரிசுகளால் கைவிடப்பட்ட மற்றும் வாரிசு இல்லாத முதியோர் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அவசர உதவி செய்யப்பட்டு வருகிறது.
பருந்து செயலியில் ரவுடிகள், கூலிப்படையினர் குறித்த வீட்டு முகவரி, அவர்களின் படம், வழக்குகள் மற்றும் குற்றங்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ரவுடிகள், கூலிப்படையினர் சிறையில் அடைக்கப்பட்ட விபரம், அவர்கள் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்வது, ஜாமினில் விடுவிக்கப்படும் விபரங்கள் குறித்து பருந்து செயலி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பும்.
இதனால், ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிகிறது.
அந்த வகையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும் உள்ள பழைய குற்றவாளிகள், 14,000 பேர் குறித்த தகவல்கள், வழக்கு மற்றும் தண்டனை விபரங்கள், அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்து கண்காணிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் நடக்கும் குற்றங்களை ஆய்வு செய்ததில், பழைய குற்றவாளிகள் அதிகம் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், பழைய குற்றவாளிகள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, செயலி வாயிலாக கண்காணிக்கப்படுகிறது.
காவல் நிலைய எல்லைகள் வாரியாக, அவர்களின் வசிப்பிடங்களுக்கும் சென்று எச்சரிக்கையும் விடப்படுகிறது. அவர்களின் படங்கள் அதிநவீன கண்காணிப்பு கேமராவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், குற்றம் நடக்கும் இடங்களில் பழைய குற்றவாளிகள் நடமாட்டம் இருப்பதை எளிதில் கண்டறிய முடியும். பழைய குற்றவாளிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையால் குற்றங்கள் குறையும். அதற்கு ஏற்ப போலீசார் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

