/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிற்சி முடிக்காத போர்மேன்கள்: பட்டாசு உற்பத்தி நிறுத்தப்படும் கலெக்டர் எச்சரிக்கை
/
பயிற்சி முடிக்காத போர்மேன்கள்: பட்டாசு உற்பத்தி நிறுத்தப்படும் கலெக்டர் எச்சரிக்கை
பயிற்சி முடிக்காத போர்மேன்கள்: பட்டாசு உற்பத்தி நிறுத்தப்படும் கலெக்டர் எச்சரிக்கை
பயிற்சி முடிக்காத போர்மேன்கள்: பட்டாசு உற்பத்தி நிறுத்தப்படும் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : பிப் 20, 2024 12:31 AM
விருதுநகர், - விருதுநகர் மாவட்டத்தில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சார்பில் நடத்தப்படும் ஒரு வார பயிற்சி வகுப்பை முடிக்காத போர்மேன்கள், கண்காணிப்பாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது தெரிந்தால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்தார்.
அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், போர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சார்பில் பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என ஒரு மாத கால பயிற்சி சிவகாசி பட்டாசு பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் ஜன. 29ல் நடந்த மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஊழியர்களை பயிற்சிக்கு அனுப்பினால் ஆலைகளில் பணிகள் பாதிக்கப்படுகிறது என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்ததால் கலெக்டர் இந்த பயிற்சியை முழு நேரப் பயிற்சியாக 1 வாரத்திற்கு அளிக்க அறிவுறுத்தி உள்ளார். இதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை முழு நேர பயிற்சியாக மாற்றப்பட்டு பிப். 12முதல் பயிற்சிகள் துவங்கி நடந்து வருகிறது.
இதில் முதல் கட்டமாக 35 ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள், கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு முன்பாக 35 பட்டாசு ஆலைகளுக்கு பயிற்சி தேதி குறிப்பிட்டு தகவல் அனுப்பப்படும்.
முதல் கடிதத்தின் அடிப்படையில் வருபவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு அடுத்தடுத்த கட்டமாக தண்ட கட்டணம் பெற்று பயிற்சி அளிக்கப்படும். 4ம் முறை கடிதம் எழுதியும் பயிற்சிக்கு வரத்தவறினால் ஆலை உரிமம் ரத்து செய்யப்படும் என பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் 3 மாத கால அவகாசத்திற்குள் அனைத்து பட்டாசு ஆலை போர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் இந்த ஒரு வார கால பயிற்சியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கால வரைமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அடிக்கடி ஏற்படும் பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்கவும் உயிர் சேதங்கள் இல்லாமல் உற்பத்தியை மேற்கொள்ளவும் தொழிலாளர்களுக்கும், போர்மேன், மேலாளர்களுக்கும் இந்த பயிற்சிகள் முக்கியமானதாக இருக்கிறது. இதை உணர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் செயல்பட வேண்டும்.
பயிற்சி பெறாத தொழிலாளர்களே அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு ஒரு காரணமாகவும் இருப்பதால் நிர்ணயித்த காலகெடுவுக்குள் பயிற்சியை முடிக்காத போர்மேன்கள், கண்காணிப்பாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் உற்பத்தி நிறுத்தம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

