/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே மேம்பாலம் பணிகள் தாமதம்
/
ரயில்வே மேம்பாலம் பணிகள் தாமதம்
ADDED : ஜன 27, 2026 05:41 AM
சிவகாசி: நில எடுப்பு பணிகள் முடிவடையாததால் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு 2024 ல் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் ரூ.62 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் இரு மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது.
திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் 609 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்த ரூ.32 கோடியும், மேம்பால கட்டுமான பணிக்கு ரூ.45.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு ஜன. 18 ல் மேம்பால கட்டுமான பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஆனால் நில எடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதுவரையிலும் நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.
பணம் வழங்கப்பட்ட பின்னர், இடம், கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு தாங்களாகவே கடை அல்லது வீடு உள்ளிட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு இருமுறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதன் பின்னரும் அகற்றவில்லை என்றால் அரசு சார்பில் கட்டடங்கள் அகற்றப்படும். இதன் பின்னரே பாலம் அமைக்கும் பணி துவங்க வாய்ப்பு உள்ளது. எனவே நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பணம் வழங்கி பாலம் கட்டும் பணியை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், இம்மாத இறுதியில் நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு விடும். தொடர்ந்து மாற்று போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் மேம்பால பணிகள் துவங்கும் என்றனர்.

