/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி; விழுப்புரம் போலீசிடம் சிக்கியது 4 பேர் கும்பல்
/
போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி; விழுப்புரம் போலீசிடம் சிக்கியது 4 பேர் கும்பல்
போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி; விழுப்புரம் போலீசிடம் சிக்கியது 4 பேர் கும்பல்
போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி; விழுப்புரம் போலீசிடம் சிக்கியது 4 பேர் கும்பல்
ADDED : பிப் 11, 2025 06:51 AM

விழுப்புரம்; பல்வேறு இடங்களில் போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த அருகே ஒழுந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ,46; தச்சு தொழிலாளி. இவரை, கடந்தாண்டு செப்., மாதம் தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், கட்டணமின்றி குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய ராஜூ, தனது ஆதார், பான் கார்டு நகல்களை மர்ம நபருக்கு அனுப்பினார். அந்த நபர், கடன் பெற பிராசசிங் கட்டணம், டாக்குமெணட் சார்ஜ், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என்றும், கடனை காப்பீடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
அதன்பேரில், ராஜூ, 15 தவணைகளாக 8.20 லட்சம் ரூபாய் அனுப்பியும் கடன் தொகை பெற்றுத் தரவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் கடந்த 3ம் தேதி வழக்குப் பதிந்தனர்.
இதுகுறித்து இணையவழி குற்றத்தடுப்பு ஏ.டி.எஸ்.பி., தினகரன் மேற்பார்வையில், தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
ராஜூவை தொடர்பு கொண்ட மர்ம நபரின் எண் செஞ்சி, பெரியகரத்தில் உள்ள கால் சென்டர் தொலைபேசி எண் என தெரிந்தது. அங்கு மேலாளராக பணிபுரிந்த செஞ்சியை சேர்ந்த அந்தோணி மனைவி வளர்மதி,36; என்பவரிடம் விசாரித்தனர்.
அவர், ஐ.டி.எப்.சி., என்ற போலியான கால் சென்டரில் மேலாளராக பணிபுரிவது தெரிந்தது.
இதன் நிறுவனர் சென்னையை சேர்ந்த கோபிகிருஷ்ணன், இவருக்கு கீழ் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆன்லைன் கடன் பெற விரும்பும் நபர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து, கோபிகிருஷ்ணனுக்கு அனுப்புவது இவர்களின் பணி. இங்கு நடக்கும் மோசடி பற்றி வளர்மதிக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியாது என தெரிய வந்தது.
கோபிகிருஷ்ணன் தமிழகத்தில் திருநெல்வேலி, துாத்துக்குடி, சென்னை, புதுக்கோட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் போலி கால் சென்டர் நடத்தி வருவதும் தெரிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, நெசப்பாக்கம் கோபிகிருஷ்ணன்,36; என்பவரையும், இவருக்கு உடந்தையாக இருந்த சென்னை, அத்திப்பட்டு தியாகராஜன் மகன் தினேஷ்,28; நெய்வேலி நடராஜன்,39; ஆகியோரை நேற்று முன்தினம் சென்னையில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தெரிய வந்ததாவது:
சென்னை உட்பட 3 மாவட்டங்களில் இணையவழி குற்ற மோசடி வழக்குகளில் சிறை சென்றுள்ள கோபிகிருஷ்ணன், தற்போது புதுவித மோசடியை அரங்கேறி உள்ளார்.
இணையவழி மூலம் நுாதன முறையில் மோசடி செய்ய திட்டம் தீட்டி, தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட போலி கால் சென்டர்களை துவக்கி, விபரம் தெரியாத இளைஞர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இதன் மூலம் கோபிகிருஷ்ணனை தொடர்பு கொள்வோரிடம், ஆவண பதிவு கட்டணம் செலுத்த வேண்டும், கடன் பெற காப்பீடு செய்ய வேண்டும் என நம்ப வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார் என தெரிய வந்தது.
இதையடுத்து, கோபிகிருஷ்ணன், வளர்மதி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார், காசோலைகள், 50 மொபைல் போன்கள், சிம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

