ADDED : ஜூலை 25, 2025 10:26 PM
விழுப்புரம்,; மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், மாநில அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்கள் குறித்தும், கடந்தாண்டு மேற்கொண்ட பணிகள், இந்தாண்டு நடந்த பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் செய்த பணிகள் குறித்தும், நடக்கும் பணிகள் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்தும், டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் பற்றியும் ஆய்வு நடந்தது.
கடந்தாண்டு, வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள், வேளாண் பயிர்களுக்கான இழப்பீடுகள் குறித்து அலுவலர்களிடம், கலெக்டர் கேட்டறிந்தார்.
இதில், வேளாண்மை துறை இணை இயக்குநர் சீனிவாசன், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

