/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஆம்பூர் கலவர வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
/
ஆம்பூர் கலவர வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
ADDED : ஆக 27, 2025 02:43 AM
ஆம்பூர், வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவர் மனைவி பவித்ரா, 25, கடந்த 2015, மே, 24ல் மாயமானார். அவரை மீட்டு தர பழனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பள்ளிகொண்டா போலீசார், ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது, 26, என்பவரிடம், 2015 ஜூன், 15ல் இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட, 6 போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஷமீல் அகமது உடல்நிலை பாதித்து உயிரிழந்தார். இதனால் ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனை, 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உட்பட, 7 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை அதிருப்தி அளிப்பதாக, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த, 2015- ஜூன், 27-ல் இரவு, 7:00 மணியளவில் ஆம்பூரில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் திரண்டு, போலீசாரை கைது செய்யக்கோரி கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் தொடர்புடைய, 120-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. கைதான, 118 பேருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திருப்பத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் முன், எஸ்.பி.,க்கள் திருப்பத்துார் சியாமளாதேவி, வேலுார் மயில்வாகனன் தலைமையில், 1,200-க்கும் மேற்பட்ட போலீசார், திருப்பத்துார் மாவட்டத்தில், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் நேற்று காலை முதல் குவிக்கப்பட்டனர். ஆனால் தீர்ப்பை நாளை (28ம் தேதி) ஒத்தி வைப்பதாக நீதிபதி மீனாகுமாரி அறிவித்தார். இருந்தாலும், ஆம்பூரில் பதற்றமான சூழலால், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.