/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய் விவகாரம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; 'உச்சநீதிமன்ற உத்தரவு அமலாக்க வேண்டும்'
/
தெருநாய் விவகாரம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; 'உச்சநீதிமன்ற உத்தரவு அமலாக்க வேண்டும்'
தெருநாய் விவகாரம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; 'உச்சநீதிமன்ற உத்தரவு அமலாக்க வேண்டும்'
தெருநாய் விவகாரம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; 'உச்சநீதிமன்ற உத்தரவு அமலாக்க வேண்டும்'
ADDED : ஆக 25, 2025 12:40 AM

திருப்பூர்; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி, இரண்டு மாவட்ட விவசாயிகள் இணைந்து, திருப்பூரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் தெருநாய்களால் முதியோர், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியானதையடுத்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிக்க தடை விதித்தும், வெறிநாய்களை காப்பகத்தில் பராமரிக்கவேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்தும், கோர்ட் உத்தரவை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அமல்படுத்த வலியுறுத்தியும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாய சங்கங்கள் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, சுற்றுச்சூழல் பாதகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வலியுறுத்திய பேனர் ஏந்தியவாறு, எஸ்.பி., அலுவலக வளாக நுழைவாயில் முதல், கலெக்டர் அலுவலக நுழைவாயில் வரை ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'கால்நடைகளை கொல்லும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்; கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கவேண்டும். தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தவேண்டும்,' என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.