/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஞ்சேரிமலை ரோட்டில் அபாய வளைவுகள்
/
செஞ்சேரிமலை ரோட்டில் அபாய வளைவுகள்
ADDED : ஆக 24, 2025 11:33 PM
குடிமங்கலம்; செஞ்சேரிமலை ரோட்டிலுள்ள, அபாய வளைவுகளை மேம்படுத்தி விடுபட்ட பகுதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், 24 கி.மீ., தொலைவு, மாவட்ட முக்கிய சாலைகள் பிரிவின் கீழ், உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
பெதப்பம்பட்டி, செஞ்சேரிமலை வழியாக, கோவை உட்பட பகுதிகளுக்கு, அதிகளவு வாகனங்கள், இந்த ரோட்டில், செல்கின்றன.
நுாற்பாலை, காற்றாலைகள் அதிகளவு இப்பகுதியில் அமைந்துள்ளதால், கனரக வாகன போக்குவரத்தும் இந்த ரோட்டில் அதிகரித்துள்ளது. ஆனால், ரோட்டிலுள்ள அபாய வளைவுகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளன.
புக்குளம், வெள்ளியம்பாளையம் பிரிவு, மாலகோவில் பிரிவு, லிங்கமநாயக்கனுார் பிரிவு, சிந்திலுப்பு, கொசவம்பாளையம் ரோடு சந்திப்பு உட்பட பல இடங்களில், இந்த ரோட்டில், அபாய வளைவுகள் உள்ளன.
எதிரே வரும் வாகனங்கள், விலகிச்செல்ல முடியாத அளவுக்கு குறுகலாகவும், 'எஸ்' வளைவு போல அமைந்துள்ளதால், கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
மேலும், வளைவு பகுதிகளில், மழைக்காலங்களில், தண்ணீர் வெளியேறாமல், ரோடு சிதிலமடைவது தொடர்கதையாக உள்ளது.
இந்த ரோடு, சில ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட துாரம் மட்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரோடு விரிவாக்கம் மற்றும் வளைவுகள் மேம்பாட்டை உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.