ADDED : ஆக 11, 2024 11:46 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகர பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து, குளுமையானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பூர் நகர பகுதிகளில் கடந்த வழக்கம்போல், நேற்றும் காலை முதலே வெயில் வாட்டி வந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல், வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. மாலை, 6:00 மணி முதல் பரவலாக மழை பெய்யத்துவங்கியது. அரை மணி நேரம் வரை, கன மழையாக பெய்தது. அதன்பின் மிதமான மழை நீடித்தது. இரவிலும் தொடர்ந்து பெய்துகொண்ட இருந்தது.
'ஷாப்பிங்' பாதிப்பு
சனிக்கிழமை வாரச்சம்பளம் பெறும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் பலரும், விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமை ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்றைய மாலை நேர மழையால், திருப்பூரில் சண்டே ஷாப்பிங் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். காதர்பேட்டையில்ஆடை வர்த்தக கடைகள், குமரன் ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு உள்பட நகரின் பிரதான சாலைகளில் உள்ள மளிகை, எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி விற்பனை நிறுவனங்கள், மாலை நேரத்தில் நுகர்வோர் வருகையின்றி, வெறிச்சோடின.
நஞ்சப்பா பள்ளி, குமரன் ரோடு பகுதிகளில் சாலையோர வர்த்தகர்கள், ஆடைகளை தார்பாயால் மூடிவைத்தனர்.
கடந்த ஒரு வாரமாகவே வெயில் தாக்கம் அதிகரிப்பால், திருப்பூரில் இரவு நேரம் உஷ்ணம் அதிகரித்து காணப்பட்டது. நேற்றைய மழையால், வெப்பம் தணித்து, குளுமையானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

