ADDED : ஏப் 19, 2024 11:06 PM
திருப்பூர்:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை சரிபார்க்கும் வகையில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் காலை, 6:00 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. திருப்பூர் லோக்சபா தொகுதியில், மாதிரி ஓட்டுப்பதிவிலேயே, 5 பேலட் யூனிட், 8 கன்ட்ரோல் யூனிட், 18 விவி பேட் என மொத்தம் 31 இயந்திரங்கள் மக்கர் செய்தன.
பெருந்துறை சட்டசபை தொகுதியில் 2 பேலட் யூனிட், 3 கன்ட்ரோல் யூனிட், 4 விவி பேட், பவானியில் 3 விவி பேட், அந்தியூரில் ஒரு கன்ட்ரோல் யூனிட், 3 விவி பேட், கோபியில் ஒரு பேலட் யூனிட், ஒரு கன்ட்ரோல் யூனிட், 5 விவி பேட், திருப்பூர் வடக்கில், 2 விவி பேட், திருப்பூர் தெற்கில், 2 பேலட் யூனிட், 3 கன்ட்ரோல் யூனிட், ஒரு விவி பேட் இயந்திரங்கள், மாதிரி ஓட்டுப்பதிவிலேயே கோளாறு ஏற்பட்டு, மாற்றப்பட்டன.
காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. சில ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு துவக்கத்திலும், ஓட்டுப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாதியிலேயும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதியிலேயே காலை வாரிவிட்டன.
அந்த இயந்திரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, 'சீல்' வைத்து, தனியே வைக்கப்பட்டது. 'ரிசர்வ்'-ல் இருந்து இயந்திரங்கள் தருவிக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு தொடரப்பட்டது.
மொத்தம், 35 இயந்திரங்கள், ஓட்டுப்பதிவின்போது மக்கர் செய்ததால் மாற்றப்பட்டன. இயந்திரங்கள் பழுதடைந்த ஓட்டுச்சாவடிகளில், 10 முதல் 20 நிமிடங்கள் வரை, ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.

