/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி பஸ் நிலைய நுழைவு வாயிலில் 'மெகா பள்ளம்' ஒரு மாதமாகியும் நகராட்சி மெத்தனம்
/
திருத்தணி பஸ் நிலைய நுழைவு வாயிலில் 'மெகா பள்ளம்' ஒரு மாதமாகியும் நகராட்சி மெத்தனம்
திருத்தணி பஸ் நிலைய நுழைவு வாயிலில் 'மெகா பள்ளம்' ஒரு மாதமாகியும் நகராட்சி மெத்தனம்
திருத்தணி பஸ் நிலைய நுழைவு வாயிலில் 'மெகா பள்ளம்' ஒரு மாதமாகியும் நகராட்சி மெத்தனம்
ADDED : செப் 02, 2025 12:32 AM

திருத்தணி, திருத்தணி பேருந்து நிலைய நுழைவு வாயிலில் மெகா பள்ளம் ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் நகராட்சி நிர்வாகம் சீரமைக்காமல், போலீசார் ஒத்துழைப்பு வழங்காததால் சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என, சமாளிக்கின்றனர்.
திருத்தணி பேருந்து நிலையத்திற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தினமும், 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், சன்னிதி தெரு வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்லும் நுழைவு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய் ஒரு மாதத்திற்கு முன் சேதமடைந்து மெகா பள்ளம் ஏற்பட்டது.
இந்த பள்ளத்தில் வாகனங்கள் அடிக்கடி சிக்கி தவிக்கின்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் வந்து விழுந்து காயத்துடன் செல்கின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் கடமைக்காக தற்காலிகமாக பள்ளத்தை சீரமைக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு நாளில் மீண்டும் மெகா பள்ளம் ஏற்படுகிறது.
பேருந்து நிலையத்திற்குள் செல்லும் அனைத்து ரக வாகனங்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
எனவே பள்ளத்தை கான்கீரிட் தளம் போட்டு சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
இது குறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பேருந்து நிலைய நுழைவு வாயிலில் ஏற்பட்ட பள்ளத்தை, கடந்த மாதம், கான்கீரிட் தளம் அமைத்தோம். நான்கு மணி நேரத்திலேயே போலீசார் அவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கு அனுமதித்தனர். இதனால், நான்கு நாட்களிலேயே மீண்டும் மெகா பள்ளம் ஏற்பட்டது.
இதற்கு நிரந்திர தீர்வு காணுவதற்கு, பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள மழைநீர் கால்வாய் உடைத்து, புதியதாக கான்கீரிட் தளம் கொண்ட கால்வாய் அமைக்க வேண்டும்.
இதற்கு குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு மேல் அவ்வழியாக வாகனங்களை போலீசார் அனுமதிக்கக் கூடாது. போலீசார் ஒத்துழைப்பு இல்லாததால் பேருந்து நிலைய மெகா பள்ளம் சீரமைப்பதில் காலதாமதம் ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
★★