/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி - கிளாம்பாக்கம் நேரடி பஸ் இயக்க கோரிக்கை
/
பொன்னேரி - கிளாம்பாக்கம் நேரடி பஸ் இயக்க கோரிக்கை
ADDED : அக் 22, 2024 08:44 PM
பொன்னேரி:பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், திருச்சி, அரியலுார், மதுரை என, பல்வேறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.
இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்கள் மற்றும் அவசர பயணமாக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு, கடந்த காலங்களில் கோயம்பேடு நிலையம் சென்று பேருந்து பிடிப்பர்.
இதற்காக, பொன்னேரியில் இருந்து கோயம்பேடு செல்லும் நேரடி பேருந்துகள் அல்லது செங்குன்றம் - கோயம்பேடு செல்லும் பேருந்துகளை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பொன்னேரியில் இருந்து கிளாம்பாக்கம் பகுதிக்கு நேரடி பேருந்து சேவை இல்லை. இதனால் பயணியர் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
பொன்னேரியில் இருந்து செங்குன்றம் - மாதவரம் - கிளாம்பாக்கம் என, மூன்று பேருந்துகளை பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கே இரண்டு - மூன்று மணி நேரம் பயணிக்கும் நிலை உள்ளது. கூடுதல் செலவினங்களும் ஏற்படுகிறது.
உடைமைகளை எடுத்துக் கொண்டு, புறநகர் பேருந்துகளில் ஏறி, இறங்கி, கிளாம்பாக்கம் செல்வதற்குள் பெரும் சிரமங்களை சந்திக்கிறோம்.
தற்போது, தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு உள்ளோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதை நினைத்தாலே கவலையாக உள்ளது.
பொன்னேரியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு குறைந்த கட்டடணத்தில் நேரடி பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனுள்ள சேவையாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

