நீர் மட்டம் குறைவால் வைகை அணையில் பிடிபடும் மீன்கள் அதிகரிப்பு: தேவை அதிகரிப்பால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
நீர் மட்டம் குறைவால் வைகை அணையில் பிடிபடும் மீன்கள் அதிகரிப்பு: தேவை அதிகரிப்பால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 25, 2026 05:00 PM

ஆண்டிபட்டி:வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் அணை நீர்த்தேக்க பகுதியில் வலையில் பிடிபடும் மீன்கள் அதிகரித்துள்ளது. தற்போது கிராமங்களில் பொங்கல் விழாக்கள் துவங்கியிருப்பதால் மீன்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
வைகை அணை நீர்த்தேக்கத்தில் பல ஆண்டுகளாக மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. கடந்த காலங்களில் மீன்வளத்துறை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைகை அணையில் மீன் பிடிப்பதற்கான உரிமத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பல லட்சம் மீன் குஞ்சுகள் நீர்த்தேக்க பகுதியில் வளர்ப்புக்காக விடப்படும். விடப்படும் மீன் குஞ்சுகள் சில மாதங்களில் வளர்ந்து விடும். வளர்ந்த மீன்கள் ஆண்டு முழுவதும் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மீன்பிடி தொழிலில் இப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீர்மட்டம் குறைவு
:
கடந்த அக்டோபரில் 70 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் தற்போது 33.17 அடியாக குறைந்துள்ளது. அணை உயரம் 71 அடி. அணையில் முழு அளவில் நீர் தேங்கினால், நீர்தேக்க பரப்பு 10 சதுர மைல் அளவில் பரந்துவிரிந்து இருக்கும். தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீர் தேக்கப் பரப்பும் குறைந்துவிட்டது. இதனால் அணையில் பிடிபடும் மீன்கள் அளவு அதிகரித்து உள்ளது.
தினமும் ஒரு டன் மீன்கள்
மீனவர்கள் கூறியதாவது: வைகை அணை நீர்த்தேக்கத்தில் கட்லா, மிருகாள், ரோகு வகையைச் சேர்ந்த வளர்ப்பு மீன்கள் அதிக அளவில் உள்ளன. நீரில் இயற்கையாக வளரும் சொட்டைவாளை, ஆரா, உளுவை வகை மீன்களும் உள்ளன. முதல் நாள் இரவு அல்லது அதிகாலையில் நீர் தேக்கத்தில் விரிக்கப்படும் வலைகளில் தற்போது மீன்கள் அதிக அளவில் பிடிபடுகின்றன.
தற்போது தினமும் ஒரு டன்னுக்கும் அதிகமான அளவில் மீன்கள் கிடைக்கிறது. மீன்கள் வரத்து குறையும் போது பொதுமக்கள் வியாபாரிகள் காத்திருந்து மீன்களை பெற்று வந்தனர். தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் அனைவருக்கும் தேவையான அளவு மீன்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பங்குனி, சித்திரை மாதங்களில் கிராம பொங்கல் விழாக்களில் அசைவ உணவில் வைகை அணை மீன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றனர்.
