/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொட்டாஷ் உரத்திற்கு விற்பனையாளர்கள் ஏற்படுத்திய செயற்கையான... தட்டுப்பாடு
/
பொட்டாஷ் உரத்திற்கு விற்பனையாளர்கள் ஏற்படுத்திய செயற்கையான... தட்டுப்பாடு
பொட்டாஷ் உரத்திற்கு விற்பனையாளர்கள் ஏற்படுத்திய செயற்கையான... தட்டுப்பாடு
பொட்டாஷ் உரத்திற்கு விற்பனையாளர்கள் ஏற்படுத்திய செயற்கையான... தட்டுப்பாடு
ADDED : ஆக 26, 2025 04:18 AM

கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடி இரண்டு போகம் நடைபெறுகிறது. 14,707 ஏக்கரில் லோயர்கேம்பில் ஆரம்பித்து தேனி வரை நடைபெறுகிறது.
தற்போது முதல் போகம் நடவு முடிந்து 45 நாட்களாகிறது. நெல் நடவு செய்த வயல்களில் 45 நாட்கள் முடிந்ததும், பயிர் வளர்ச்சிக்காக பொட்டாஷ் உரமிடுவது அவசியமாகும். சில விவசாயிகள் நடவு செய்ததில் இருந்தே பொட்டாஷ் உரத்தை கொஞ்சம் கொஞ்சமாக போடுவார்கள். பெரும்பாலான விவசாயிகள் நடவு செய்த 40 வது நாளில் இருந்து பொட்டாஷ் உரமிடுவார்கள். இந்த உரம் வழங்கவில்லை என்றால், நெல் பயிர்கள் வளர்ச்சி இருக்காது. நெல் பயிருக்கு போன்று வாழை உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கும் பொட்டாஷ் மிக அவசியமாகும்.
தற்போது நெல் சாகுபடிக்கு பொட்டாஷ் உரமிட வேண்டிய காலம். ஆனால் உரக்கடைகளில் பொட்டாஷ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கிறது. விவசாயிகள் உரக்கடைகளுக்கு சென்று கேட்டால் இல்லையென்ற பதில் தான் கிடைக்கிறது.
பொட்டாஷ் பழைய விலை ஒரு மூடை ரூ. 1550 ஆகும். புதிய விலை ரூ.1800 ஆகும். மூடைக்கு ரூ.250 அதிகரித்துள்ளது. இதனால் பழைய இருப்பை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன் கூறுகையில்,' உரக்கடைகளில் பொட்டாஷ் கேட்டால் இன்று வந்து விடும், நாளைக்கு வந்து விடும் என கூறி 15 நாட்களாக இழுத்தடித்து வருகின்றனர்,' என்றார்.
இது தொடர்பாக கடந்த வாரம் வேளாண் அலுவலர் பிரசன்னா ( தரக் கட்டுப்பாடு ) கூறுகையில், ' மாவட்டத்திற்கு 270 மெ.டன் பொட்டாஷ் தேவைப்படுகிறது. தற்போது 510 டன் வரை இருப்பு உள்ளது. இது தவிர ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சப்ளை செய்ய வேண்டும் என்று கம்பெனிகளுக்கு நிர்ணயம் செய்துள்ளோம். ஐ.பி.எல் நிறுவனம் 350 மெ.டன் இந்த மாதம் சப்ளை செய்ய வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து விட்டது. வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமை தேனி வந்து விடும்,' என்றார். அவர் கூறி ஒரு வாரம் கடந்தும் இன்னமும் உரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பழைய இருப்பை பதுக்கி , கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி பயன் இல்லை. எனவே, செயற்கை தட்டுப்பாட்டை போக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்.