ADDED : டிச 20, 2025 05:25 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
வைகை அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் கடந்த சில மாதங்களாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
டிச.15ல் ராமநாதபுரம் பாசனத்திற்கு இந்த ஆண்டு 2ம் முறையாக ஆற்றின் வழியாக வினாடிக்கு 1500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதுடிச., 17 ல் 1200 கன அடியாக குறைக்கப்பட்டு, மீண்டும் நேற்று வினாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
ஏற்கனவே அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 1900 கன அடியும், மதுரை, தேனி ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.
அணை நீர்மட்டம் 59.91 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 1167 கன அடி.

