/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பல்கலை., பெண் உதவி பதிவாளர் தற்கொலை முயற்சி
/
பல்கலை., பெண் உதவி பதிவாளர் தற்கொலை முயற்சி
ADDED : நவ 23, 2024 08:47 AM

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, அழகப்பா பல்கலை உதவி பதிவாளர் (ஓய்வு) ஆர்.பத்மாவதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
காரைக்குடி அருகே வைரவபுரத்தை சேர்ந்தவர் ஆர்.பத்மாவதி. அழகப்பா பல்கலையில் உதவி பதிவாளர் (தொழில்நுட்பம்), பணிபுரிந்தார். 2023 மார்ச் 31 அன்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்று ஒன்றரை ஆண்டு முடிந்தும், ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கவில்லை. இது குறித்து பல முறை பல்கலை நிர்வாகத்திடம் கேட்டும் தீர்வு எட்டப்படவில்லை.
சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடமும் அவர் பல முறை மனு அளித்துள்ளார். அதன்பின்னரும் தீர்வு காணப்படவில்லை. இதனால் பத்மாவதி நேற்று காலை 11:30மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ., செல்வராஜ், அவரை மீட்டு கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவனிடம் அனுப்பினார். பின்னர் அப்பெண்ணிற்கு முதலுதவி அளித்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தணிக்கை துறை தான் காரணம்
காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி.ரவி கூறியதாவது: அவருக்கு ஓய்வூதிய பலனை கொடுக்கத்தான் விரும்புகிறோம். நேரடியாக அழைத்து பேச முயற்சித்தும் அவர்கள் வரவில்லை. பதிவு தபால் அனுப்பியும் அதை வாங்கவில்லை. இவருக்கான பணப்பலனை தணிக்கை துறை தான் நிறுத்தி வைத்துள்ளது. பல்கலை நிர்வாகத்திடம் ஒன்றும் இல்லை என்றார்.

