/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தகுதியற்றவர்களுக்கு இலவச பட்டா அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
தகுதியற்றவர்களுக்கு இலவச பட்டா அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
தகுதியற்றவர்களுக்கு இலவச பட்டா அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
தகுதியற்றவர்களுக்கு இலவச பட்டா அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 09, 2024 04:40 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே தகுதியற்றவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருப்பத்துார் அருகே தெம்மாப்பட்டு தமிழரசி தாக்கல் செய்த மனு: தெம்மாப்பட்டுவை சேர்ந்த ஆதிதிராவிடர்களின் நலனிற்காக காட்டாம்பூரில் 2.20.0 எக்டேர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க 1997 ல் மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியானது. தகுதியில்லாத சிலர் போலி ஆவணங்கள் அடிப்படையில் மோசடியாக பட்டா ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
தமிழக வருவாய்த்துறை செயலர், சிவகங்கை கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார் (வழக்கு நிலுவையில் இருந்த காலகட்டத்தில் தமிழரசி இறந்தார். அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் என்பவர் மனுதாரராக இணைத்துக்கொள்ளப்பட்டார்).
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
கலெக்டர் தாக்கல் செய்த பதில் மனு: பட்டாகோரி விண்ணப்பித்தவர்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்து தகுதியான 138 பேருக்கு தேவகோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் 2006 முதல் 2008 ல் பட்டாக்களை வழங்கியுள்ளார்.மனுதாரரின் புகார் குறித்து தாசில்தார் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார். ஒதுக்கீடு பெற்ற 138 பேர்களில் 3 பேர் மட்டுமே வீடுகள் அமைத்து வசிக்கின்றனர். 62 பேர் பிளாட்களை பதிவு ஆவணங்களுடன் பிறருக்கு விற்றுள்ளனர். மீதமுள்ள 73 பேர் தற்போது வரை வீடுகள் கட்டவில்லை. பிற சமூகத்தை சேர்ந்த 9 பேர் தாங்கள் வாங்கிய பிளாட்களில் வீடுகள் கட்டியுள்ளனர். இது விதிமீறலாகும்.
தாசில்தார் அறிக்கையின் அடிப்படையில் நிபந்தனைகளை மீறியதற்காக 62 வீட்டு மனை ஒதுக்கீடு பட்டாக்களை ரத்து செய்ய திருப்பத்துார் தாசில்தார், தேவகோட்டை சிறப்பு தாசில்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, வீட்டு மனைப் பட்டா கோரியவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள்: தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு, இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் பெற உரிமை இல்லாத நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு அல்ல.
லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணை நடத்தி, தகுதியில்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர்.

