ADDED : ஆக 12, 2026 05:21 AM

ஓமலுார்:ஓமலுார்
அருகே தாசநாயக்கன்பட்டியில், பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
எதிரே, தனியார் பட்டா நிலம் உள்ளது. அங்கு இரு நாட்களாக டிப்பர் லாரிகள்
மூலம் குப்பை கொண்டு வந்து கொட்டப்பட்டது.
இதை அறிந்த அப்பகுதி
மக்கள், நேற்று மதியம், 'லாரி எங்கு செல்கிறது' என பின் தொடர்ந்து
சென்று பார்த்தனர். பின் குப்பை கொட்டப்படுவதை பார்த்து அதிர்ச்சி
அடைந்தனர்.
பள்ளி எதிரே திறந்த வெளியில் கொட்டுவதால், பொது
சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும்
என்பதால், குப்பையுடன் வந்த, 'மாரங்கலத்து ஊராட்சி' என பெயர் இருந்த
குப்பை வண்டி மற்றும் தனியார் டிப்பர் லாரியை, மக்கள் சிறைபிடித்தனர்.
தொடர்ந்து அதன் டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்
குப்பையை அள்ளிச்செல்ல வேண்டும் என தெரிவித்து, ஊராட்சி வண்டியை
விடுவித்தனர். அதேநேரம் தனியார் டிப்பர் லாரியை விடவில்லை.
இதுகுறித்து பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள்
கூறினர்.
