நீலகிரியின் நிலையான மேம்பாட்டுக்கு புதிய திட்டம் அவசியம்! பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலில் அமைத்தால் பயன்
நீலகிரியின் நிலையான மேம்பாட்டுக்கு புதிய திட்டம் அவசியம்! பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலில் அமைத்தால் பயன்
UPDATED : ஜூலை 22, 2026 06:48 AM
ADDED : ஜூலை 21, 2026 05:20 PM

குன்னுார்: 'நீலகிரியின் நிலையான மேம்பாட்டுக்கு, பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலில் புதிய திட்டத்தை அரசு வகுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், 'வனங்கள் சூழ்ந்த மலை, புல்வெளி, அரிய வகை தாவரங்கள், மூலிகை செடிகள், மரங்கள், பல்லுயிர்கள்,' என, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் பெற்ற பகுதியாக உள்ளது.
இதனால், இந்த இயற்கை செல்வங்களையும், சுற்றுச்சூழலை பாதிப்புகளை தவிர்க்கவும், 1993ல் 'மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து, 'மறு சூழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை; கட்டுமானங்களுக்கு கட்டுப்பாடு,' என, பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
காலநிலையில் மாற்றம்
இங்கு சுற்றுலா, விவசாயம் ஆகியவை மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக உள்ள நிலையில், சமீப காலமாக விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாறுவது அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் 'மாஸ்டர் பிளான்' சட்டங்களை மீறி, விதிமீறிய கட்டடங்கள் அதிகரித்ததால், குளிர் வாசஸ்தலம், வெப்பபூமியாக மாறி வருகிறது. மாவட்டத்தில் உள்ள சில உள்ளாட்சி நிர்வாகங்களில், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களால் நகர நிர்வாகம் கட்டுப்பாடின்றி விதிமீறல்களுக்கு அடித்தளமாக உள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல், கட்டட அனுமதி மற்றும் விதிமுறைகள் தன்னிச்சையாக மீறப்பட்டு அரங்கேறி வருகின்றன.
மரக்கடத்தல் அதிகரிப்பு
மேலும், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகள், மக்கள் தொகைக்கு ஏற்ப பூர்த்தி செய்யாததால், ஆண்டுதோறும் வரும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். சுற்றுலா திட்டங்கள் நீண்டகால திட்டமிடலின்றி அன்றாட அடிப்படையில் மட்டுமே மேற்கொள்வதால், வாகன நெரிசல்; கழிப்பிட பிரச்னைகள், சுத்தமான குடிநீர் போன்றவைகள் தீர்க்கப்படாத பிரச்னைகளாக உள்ளன.
வன மேலாண்மை காலாவதியான ஒன்றாக உள்ளதால், வனப்பகுதிக்கும் மனித குடியிருப்புகளுக்கும் இடையிலான எல்லை குறைந்து, மனித-, விலங்கு மோதல்கள் அதிகரித்துள்ளன. மேலும், மாவட்டத்தின் மதிப்புமிக்க 'ரோஸ்வுட்' மரங்களை வெட்டுவதற்கான தடையை, கடந்த ஆட்சியாளர்கள் அகற்றியதால், பட்டியல் வகை மரக்கடத்தல் அதிகரித்துள்ளது.
தொலை நோக்கு திட்டம் அவசியம்
புதிய நீலகிரி ஆவண காப்பக கவுரவ இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில், 30 ஆண்டுகளாக உள்ள,'மாஸ்டர் பிளான்' திட்டம் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்பட்ட மாற்றப்படவில்லை. அதில், உள்ள, 'ஹாகா' கமிட்டி பாதுகாப்புக்கு பணிகளுக்கு பதிலாக, பெரிய வணிக கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்பாக மாறிவிட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வந்தாலும், கட்டடங்கள் அதிகரிப்பால், இங்கு நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன.
நீலகிரியின் நிலையான மேம்பாட்டுக்கு, பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலில் புதிய திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் எங்கள் அமைப்பின் சார்பில் முறையிடப்பட்டுள்ளது. சூழலியல் குறித்த அறிவியல் ஆய்வு முடிக்கப்படும் வரை, நீலகிரியில் நடக்கும் அனைத்து பெரிய வளர்ச்சி திட்டங்களுக்கும் இடைக்கால தடை விதிக்க அரசு நடவடிக்கை வேண்டும்,'' என்றார்.
